தமிழகத்தில் இனி விண்ணப்பித்த 2 மாதங்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியிருக்கிறார்.
சட்டப்பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்படுவதாகவும், இதுவரை 12 ஆயிரத்து 619 குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் 9 லட்சம் பேருக்கு முறையாக பதில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றார்.
மண் எண்ணை கடத்தலைத் தடுக்க குற்றப்புலனாய்வுத் துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், கடந்த முதல் தேதியில் இருந்து, இதுவரை 14 ஆயிரத்து 37 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம் என்றும், அதனால்தான் ரேஷன் கடைகளில் 1.5.2007 முதல் பருப்பு, கோதுமை, ரவை மற்றும் பாமாயில் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பொதுவிநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது இருப்பின் அதுபற்றி புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment