Search

Custom Search

Thursday, May 29, 2008

ரீமிக்ஸ் பாடலால் பெருமையில்லை- பரத்வாஜ்

இசையமைப்பாளர் பரத்வாஜ்
ரீ-மிக்ஸ் பாடல்கள் சமீப காலமாக தமிழ்ப் படங்களில் அதிக அளவில் இடம்பெற்று வரும் நிலையில், அதுபற்றி பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் அளித்த பேட்டி....
ரீமிக்ஸ் பாடல்களை நீங்கள் வரவேற்கிறீர்களா?
ரீமிக்ஸ் பாடல்கள் தேவையில்லை. அதனால் இசையமைப்பாளருக்கு எந்தப் பெருமையும் இல்லை. எனவே அதுபோன்ற பாடல்களில் எனக்கு உடன்பாடில்லை.
பழைய படங்களின் கதையுடன் வெளியாகும் படங்களுக்கு அவசியம் இல்லையா?
அஜீத்தின் `பில்லா' போன்ற படத்துக்கு ரீமிக்ஸ் பாடல் அமைத்ததை நான் வரவேற்கிறேன். காரணம், பழைய படத்தின் கதை, அதே சூழ்நிலை இருப்பின் ரீமிக்ஸ் பாடல் கம்போஸ் செய்யலாம்.
ஆனால் முன்பு ஒரு படத்தின் கதை, சூழலுக்காக உருவாக்கப்பட்ட பாடலை, இப்போது புதுப்படங்களில் பயன்படுத்துகிறார்கள். அதைத்தான் வேண்டாம் என்கிறேன்.
ரீமிக்ஸ் பாடலால் ஏற்படும் பாதிப்பாக எதை கருதுகிறீர்கள்?
ரீமிக்ஸ் பாடல்களுக்காக பழைய பாடகருக்கோ, இசையமைப்பாளருக்கோ, பாடலாசிரியருக்கோ எந்தவித சன்மானமும் வழங்கப்படுவதில்லை. புதிய பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
உங்கள் படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் அமைப்பீர்களா?
முடிந்தவரை ரீமிக்ஸ் பாடல்களை தவிர்ப்பேன். இயக்குனரும், தயாரிப்பாளரும் வற்புறுத்தும் பட்சத்தில், அதை மீற முடியாது என்று பரத்வாஜ் கூறினார்.

அதிவேக பிராட்பேண்ட் சேவை: சிஃபி அறிமுகம்

இணையதள சேவை வழங்கி வரும் நிறுவனமான சிஃபி, ஐ-பாஸ் நிறுவனத்துடன் இணைந்து அதிவேக பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய சேவை மக்கள் அதிகம் கூடும் இடங்களான விமானநிலையம், உணவு
விடுதிகள், சில்லரை வணிக வளாகங்கள் என ஒரு லட்சம் இடங்களில் (சர்வதேச
அளவில்) கிடைக்கும் என்று சிஃபி (Sify) நிறுவனத்தின் நிர்வாக தலைவர் நாத்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

'ரோம் கனெக்ட் இன்டர்நேஷனல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய
சேவையை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களின் மடிக்கணினிகள்,
செல்போன்கள் மூலம் இணைய சேவையை பயணத்தின் போதே பயன்படுத்த முடியும் என்பதே
இதன் சிறப்பம்சம்.

இந்திய இணையதள சேவைச் சந்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில்
செல்வதால், ஐ-பாஸ் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் ஒரு
பகுதியாகவே சிஃபி நிறுவனத்துடன் இணைந்து 'ரோம் கனெக்ட் இன்டர்நேஷனல்'
பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் ஐ-பாஸ் நிறுவன
மூத்த அதிகாரி ஷீ-லெங் லாய் தெரிவித்தார்.

Tuesday, May 27, 2008

திருட்டு மென்பொருள்: இந்தியாவிற்கு 2 பில். டாலர் இழப்பு

சட்ட விரோத, திருட்டு மென்பொருட்கள் புழக்கத்தினால் இந்திய மென்பொருள் தயாரிப்புத் துறைக்கு இந்த ஆண்டு 2 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச மென்பொருள் தொழிற்துறையை பிரதிநிதித்துவம் செய்யும் பிசினஸ் சாஃப்ட்வேர் அலையன்ஸ் (பி.எஸ்.ஏ) நடத்திய ஆய்வில், பொதுவாக திருட்டு மென்பொருள் புழக்கம் குறைந்திருக்கிறது என்றாலும் 2006-ம் ஆண்டில் 1.28 பில்லியன் டாலரும், 2007- ல் 2 பில்லியன் டாலரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பெர்சனல் கம்ப்யூட்டர்களில் திருட்டு மென்பொருள் உபயோகம் 2007-ம் ஆண்டு 69 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தப் பிரிவில் உலக அளவிலும் கூட திருட்டு மென்பொருள் புழக்கம் குறைந்துள்ளது என்று கூறுகிறது இந்த ஆய்வு.
திருட்டு மென்பொருள் புழக்கங்களால் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இழப்புகளை கடுமையாக சந்தித்து வருகிறது. முன்பு ஒரு முறை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் இதுகுறித்து, திருட்டு மென்பொருள் புழக்கங்களால் வருவாயில் பெரும்பகுதியை இழக்க நேரிடுகிறது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மென்பொருள் தயாரிப்புத் துறையின் வருவாயை மட்டும் இந்த திருட்டு மென்பொருள் புழக்கம் பாதிக்கவில்லை, வேலைவாய்ப்புகளையும் பறித்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கே முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று இந்த துறையைச் சார்ந்தவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
4 ஆண்டு காலக் கட்டத்தில் கணினி திருட்டு மென்பொருள் புழக்கத்தை வெறும் 10 சதவீதப் புள்ளிகள் குறைத்தாலே 44,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் 3.1 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும், வரிவருவாய் 200 மில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும் ஐ.டி.சி. பொருளாதாரத் தாக்க ஆய்வு ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது இது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல நிறுவனங்கள் இறங்கியிருப்பதால் ஓரளவிற்கு திருட்டு மென்பொருள் புழக்கம் குறைந்திருக்கிறது என்றாலும் முற்றிலும் இதனை ஒழிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதே இந்த துறையினரின் கவலையாக உள்ளது.

குறைந்து வரும் வெயிலின் தாக்கம்

த‌மிழக‌த்த‌ி‌ல் நே‌ற்‌று ஆ‌ங்கா‌ங்கே ஒரு ‌சில இட‌‌ங்‌க‌ளி‌ல் மழை பெ‌ய்‌திருப்பதால், மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
அ‌திகப‌ட்சமாக சோழவ‌ந்தா‌‌னி‌ல் 5 செ.‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்தது. மண‌ப்பாறை, ந‌ன்‌னில‌ம், கரூ‌ர், பரம‌த்‌தி, ‌திரு‌ப்ப‌த்தூ‌ர், ‌திரு‌ப்புவன‌ம் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 3 செ.‌மீட்டரும், ‌திருவாரூ‌ரி‌‌ல் 2 செ.‌மீ‌ட்ட‌ரும் மழை பெ‌ய்திருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
த‌மிழக‌‌த்‌தில் அடுத்த 2 நாட்களில், ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று‌ம் அந்த தகவல் தெரிவித்துள்ளது.
த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் கடலோர பகு‌திக‌ளி‌ல் ஆ‌ங்கா‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்றும் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
செ‌ன்னை‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக வெ‌ப்ப‌நிலை 39 டிக‌ி‌‌ரி செ‌ல்‌சியஸையொ‌ட்டியே இரு‌க்கு‌ம்.
கத்திரி வெயில் முடிவடைவதற்கு ஒரு சில நாட்களே உள்ளதால், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்க‌ம் ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.

Saturday, May 24, 2008

கேப்டனாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - சச்சின்


சச்சின் டெண்டுல்கர்
இந்திய பிரிமியர் லீக் டுவெண்டி -20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது தமக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது என்றும், இந்தப் பொறுப்பு ம்கிழ்ச்சி அளிப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் போட்டி நடைபெறவிருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு டெண்டுல்கர் அளித்த பேட்டியில், தமது அனுபவம் சிறப்பான வகையில் அமைந்திருப்பதாகக் கூறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், நடுக்கள ஆட்டக்காரராக இறங்குவதை தாம் விரும்புவதாகவும் சச்சின் கூறினார்.
சர்வதேச கேப்டன்களான போல்லாக், சனத் ஜெயசூர்யா இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருப்பதால் தமது பணி எளிதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிவியை முந்துகிறது இணையதளம்: ஆய்வு


அகண்ட அலைவரிசை இணையதள (பிராட்பேண்ட்) இணைப்பு வைத்துள்ளவர்கள் வீட்டில், டிவி பெட்டிகளை விட கணினிகளே அதிக நேரம் பயன்படுத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஸ்கோ என்ற நிறுவனம் சார்பில், பிராட்பேண்ட் இணைப்பு உள்ளவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு வார காலத்தில் அவர்கள் வீட்டில் உள்ள கணினிகள் 22 மணிநேரம் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அதே காலத்தில் அவர்களது டிவி பெட்டிகள் 14 மணி நேரம் மட்டுமே இயங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.
பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி இணையதளத்தில் தாங்கள் விரும்பிய திரைப் படங்களை பதிவிறக்கம் செய்வது, கண்டு ரசிப்பதுமே இதற்கு காரணம் என சிஸ்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 864 வீடுகள் மற்றும் நியூசிலாந்தின் 219 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இணையதளத்தில் குறும்படங்கள் மற்றும் பிற திரைப்படங்களை காண்பது மிகவும் வசதியாக (விளம்பரங்கள் தொல்லையின்றி) உள்ளதால் இணையத்தில் படம் பார்ப்பதை விரும்புவதாக ஆய்வில் பங்கேற்ற 51 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டிலும் இதேநிலை ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி சாத்தியமானால் தற்போதைய டிவி சேனல்களுக்கு போட்டியாக இணையதளங்களும் கவர்ச்சிகர விளம்பரங்களை ஒளிபரப்பலாம்.
இதே சில சாம்பிள்கள்... 'உலக இணையதள வரலாற்றில் முதன் முறையாக'... அல்லது 'லெஸி வித் மீனூ' என்பது போன்ற விளம்பரங்களும் உங்கள் கணினி திரையில் துள்ளி விளையாடலாம்...

'மானிய விலையில் பிராட்பேண்ட் இணைப்பு'


ஆ.ராசா
பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மானிய விலையில் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார்.
கிராமப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகள் கிடைக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.
கிராமப் பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதிகள் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைத்திருப்பதாகவும், மிகவும் பின் தங்கிய பகுதியில் இருக்கும் 14,183 கிராமங்கள் கண்டறியப்பட்டு அங்கு தொலைப்பேசி இணைப்புகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் மாதம் ஒன்றுக்கு 80 லட்சம் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், வரும் 2010-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 50 கோடியாக உயரும் என்றார்.
பிரபல தேடுதல் சேவை நிறுவனமான கூகிள் நிறுவனத்தின் கூகிள் எர்த் என்ற சேட்டிலைட் இமேஜ் வடைபட சேவைக்குப் போட்டியாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ சேட்டிலைட் வரைபட சேவையை வழங்க உள்ளது.
இஸ்ரோவின் சேட்டிலைட் சேவை அடுத்த 6 மாதத்தில் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் ஜி. மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இமேஜ் (படங்கள்) அனைத்தும் இஸ்ரோவின் இணைய தளங்களில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கருதப்படும் பகுதிகள் இமேஜாக வெளியிடுவதற்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கும் என்றும், ஏனைய இமேஜ் அனைத்தும் இணையத்தில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான ரிமோட் சென்சிங் சேட்டிலைட்டுகளை கொண்டிருப்பது இந்தியா என்றும் அவர் கூறினார்.

Monday, May 12, 2008

ஜிபிஎஸ் வசதியுடன் செல்போன்: ஹெச்டிசி அறிமுகம்

தைவான் நாட்டின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹை-டெக் கம்ப்யூட்டர் கார்பரேஷன் (HTC corporation), குரூய்ஸ் என்ற அதிநவீன செல்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹெச்டிசி டச் (HTC Touch) செல்போன் வரிசையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள குரூய்ஸ் (HTC Touch Cruise) போனில், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் எனப்படும் ஜிபிஎஸ் வசதி உள்ளது.
மின்னஞ்சல், குறுஞ்செய்தி, நாள்காட்டி, தொடர்பு எண்கள், வானிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் உள்ள ஆட்டோ-ஃபோகஸ் கேமரா 3 மெகா பிக்சல் திறன் கொண்டது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
2.8 இன்ச் அகலம் கொண்ட வண்ணத்திரை, எஃப்.எம் ரேடியோவுடன் கூடிய இந்த போன் விண்டோஸ் மொபைல் 6 புரொபஷனல் மென்பொருளில் இயங்கும் என ஹெச்டிசி குறிப்பு தெரிவிக்கிறது.
மெமரி கார்டு பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த செல்போனின் விலை ரூ.32,990 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

`வாக்கி டாக்கி' : டாடா இண்டிகாம் அறிமுகம்

வெகுவேகமாக முன்னேறி வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான டாடா இண்டிகாம், வீட்டு போன் பிரிவில் `வாக்கி டாக்கியை' அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்தில் அடங்கிய ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்து வரும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், கர்நாடகத்தில் இந்த வாக்கி டாக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள சந்தை பங்களிப்பை 60 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
தற்போது ரூ. 1,399 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்கிடாக்கி, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கும், ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு போன்கள் பயனாளர்களுக்கு ஏற்ற வகையில், அவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய வாக்கி வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநருக்கு தனி ஆணையகம்

முதலமைச்சர் கருணாநிதி
சென்னை மாநகர காவல் துறை ஆணையகத்தை பிரித்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு என்று தனி ஆணையகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி இன்று பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருச்சிராப்பள்ளி நகரில் புதிய காவல் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். இவ்வாண்டில் ரூ. 110 கோடி செலவில் 2,000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
சொந்த கட்டிடம் இல்லாத 273 காவல் நிலையங்களுக்கு, புதியதாக சொந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
படிப்படியாக அனைத்து புறகாவல் நிலையங்களும் முழுநேர காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். இதன்படி மாநிலத்தில் உள்ள 10 புறகாவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக மாற்றப்படும்.
தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டை, கம்பம், காரைக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட 15 இடங்களில் செயல்பட்டு வரும் காவல் நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்.சென்னை அருகே செம்மஞ்சேரி மற்றும் வேலூர் மாவட்டம் அரியூரில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
கலவை, சூரமங்கலம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

Tuesday, May 6, 2008

`தசாவதாரம்' படத்திற்கு எதிர்ப்பு

தசாவதார‌ம் கேச‌‌ட் வெ‌ளி‌யீடு
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் `தசாவதாரம்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் திரையிட விடமாட்டோம் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.
இந்தப் படத்தில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருப்பதாகத் தெரிகிறது. சாமி சிலைகள் சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை சேர்த்திருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும், அதுபோன்ற காட்சிகளை மாற்ற வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
அதுபோன்ற காட்சிகளை அனுமதிக்கக் கூடாது, நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் `தசாவதாரம்' திரைப்படத்தை பொதுமக்கள் துணைகொண்டு, இந்து முன்னணி போராடி தடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், ஆடை அவரவர தனிப்பட்ட விஷயம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் அதில் குறிப்பிட்டுள்ளார்.