Search

Custom Search

Sunday, June 15, 2008

தசாவதாரம்:

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தடைகளை கடந்து ஒருவழியாக 'தசாவதாரம்' வெளியாகிவிட்டது. 12-ம் நூற்றாண்டில் தொடங்கி 21-ம் நூற்றாண்டில் படம் முடிகிறது.
இந்த காற்றாற்று வெள்ளத்தில், உணர்ச்சிகரமான கதையையோ அல்லது ஊடுருவித் துளைக்கும் காட்சியையோ எதிர்பார்த்தால் ஏமாற்றமே.
சைவ- வைணவ சண்டையுடன் தொடங்குகிறது 'தசாவதாரம்'. சண்டை என்று வந்த பின் செக்கேது? சிலையேது?
சிவனை வணங்க மறுக்கும் ராமானுஜ நம்பியை கோவிந்தராஜ பெருமாள் சிலையுடன் கட்டி, கடலில் வீசுகிறான் சைவத்தைச் சேர்ந்த குலோத்துங்கச் சோழன். சோழனால் சமுத்திரத்தில் மூழ்கிய கதை, மீண்டெழுவது 11ம் நூற்றாண்டில்.
அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் கோவிந்தன், வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கிறான். பரவினால் தரணியே நாசமாகும் இந்த வைரசை, உயரதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுக்கு விலை பேசுகிறார். இதை தடுக்க, வைரசை கோவிந்தன் கடத்துகிறார்.
முன்னாள் ஏஜென்டான வெள்ளை அமெரிக்கன் பிளட்சர் தான் வில்லன். கோவிந்தன் ஓட, வில்லன் துரத்த...மீதி ரீல் முழுவதும் ஜாலியோ..ஜிம்கானா.
கோவிந்தனின் ஓட்டம் அமெரிக்காவில் தொடங்கி, சென்னை சுனாமி பேரலைகளுடன் முடிகிறது.
இந்த நெடும் பயணத்தில் சோழர் கால வைணவ இளைஞன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மனநிலை பாதித்த பாட்டி, ஜப்பானிய கராத்தே மாஸ்டர், பஞ்சாபி பாடகர், நியாயம் கோரும் தலித் இளைஞன், அமெரிக்க கொலை வெறியன், அப்பாவி முஸ்லிம் இளைஞன், விஞ்ஞானி, தெலுங்குகார உளவுத்துறை அதிகாரி... என பல வேஷம் காட்டுகிறார் கமல். ஆனால் இதில் சில மனதை கவரவில்லை.
'தசாவதாரம்' கமல்
சுந்தரத் தெலுங்கு பேசும் பல்ராம் நாயுடு நகைச்சுவை சரவெடி. பிளெட்சர் (கமல்) வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு, இலக்கைத் தவிர எதையும் மதிக்காத முரட்டுத் தனம்.
கிருஷ்ணவேணி பாட்டி வேடத்தில் மேக்கப் சற்று தூக்கல். பாட்டி உட்பட சில கேரக்டர்களில் கமலின் பேச்சை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
நம்பியாக வரும் கமலின் நடிப்பும், தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் சோழர் கால அரங்க அமைப்புகளும் புல்லரிக்க வைக்கின்றன.
நம்பியின் மனைவி, சிதம்பரம் ஆண்டாள் என அசினுக்கு இரட்டை வேடம். வில்லனுக்கு உதவி புரிந்து அநியாயமாக உயிர்விடும் மல்லிகா ஷெராவத், மணக்காத மல்லிகை. பி. வாசு, சந்தான பாரதி, நாகேஷ், ஜெயப்ரதா, கே.ஆர். விஜய, வையாபுரி ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பாடல்களுக்கு இசையமைத்த ஹிமேஷ் ரேஷ்மையா, பின்னணி இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத், எடிட்டர் தணிகாசலம் ஆகியோருக்கு தனித்தனியே பாராட்டு விழா நடத்தலாம்.
படத்தின் நிஜ பலம் தொழிநுட்பம். கிராபிக்ஸில் தூசி முதல் சுனாமி வரை காட்டி, அசத்தியிருக்கிறார்கள். வசனத்தில் காரமும் உண்டு; காமெடியும் உண்டு. படம் நெடுக வரும் வரலாற்று விழிப்புணர்வு, பிற தமிழ் படங்களில் பார்க்க முடியாதது.
இரண்டு, மூன்று கமல்கள் வரும் காட்சிகள் நிறைய உண்டு. அதை சின்ன உறுத்தல் கூட இல்லாமல் படமாக்கியிருப்பதில் கே.எஸ். ரவிக்குமாரின் உழைப்பு பளிச்சிடுகிறது.
இவ்வளவு இருந்தும் அழுத்தமான கதை இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுவது, இதன் ஒரே பலவீனம்.
எனினும் கமல் + கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியினரின் இப்படம், ஒரு மெகா கார்னிவால். அதில் கரைய முடிந்தவர்களுக்கு கொண்டாட்டம் கியாரண்டி.


No comments: