Search

Custom Search

Thursday, March 27, 2008

இணையதள பயன்பாடு: அமெரிக்காவை முந்தியது சீனா

சர்வதேச அளவில் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை அப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் செயல்படும் பிடிஏ (BDA) என்ற தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி, சீனாவில் 220 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்றும், இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 217 மில்லியன் மக்களே இணையதளத்தை பயன்படுத்தியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார முன்னேற்றம், அகண்ட அலைவரிசை தொழில்நுட்பத்தில் சிறப்பான மேம்பாடு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று பிடிஏ நிறுவனத்தை சேர்ந்த லியு பின் தெரிவித்தார்.
நடப்பாண்டில் (2008) சீனாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 280 மில்லியனாக உயரும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.
கடந்த 1969ல் அமெரிக்க ராணுவ பயன்பாட்டுக்காக இணையதளம் கண்டுபிடிக்கப்பட்டது முதலே, இணைய பயன்பாட்டில் முதலிடத்தில் அமெரிக்கா இருந்து வந்ததாகவும், தற்போது அந்நிலை மாறியுள்ளதாகவும் சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இசை நிறுவனங்களுடன் ஆப்பிள் இங் பேச்சு?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், ஐபோன்களில் வாடிக்கையாளர்கள் பல்வேறு தரப்பட்ட இசைகளையும், பாடல்களையும் கேட்டு மகிழ ஏதுவாக அந்த நிறுவனம் முக்கிய இசை நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிகிறது.
வாடிக்கையாளர்கள் ஐட்யூன் இசை லைப்ரரியை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களுக்கு பிரிமியத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது.
வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை கட்டுப்பாடற்ற இசையைக் கேட்பதற்கு, சுமார் 100 டாலர் வரையோ அல்லது மாதந்தோறும் 7 முதல் 8 டாலர் வரையோ அளிக்கத் தயாராக இருப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
என்றாலும் இசை நிறுவனங்களுடன் பேச்சு குறித்து, ஆப்பிள் இங் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்தோனேஷியாவில் ஆபாச தளங்களுக்கு தடை

செக்ஸ் மற்றும் வன்முறை இடம்பெற்றுள்ள இணைய தளங்களுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய தகவல் மசோதாவை இந்தோனேஷிய எனு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
சமீபகாலமாக இணைய தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக இந்தோனேஷியாவில் மிகப்பெரிய விவாதம் நடத்தப்பட்டு, பல்வேறு கருத்துவேறுபாடுகள் உருவாகின.
என்றாலும் ஆபாசக் காட்சிகள், வன்முறை, இன அடிப்படையிலான நிகழ்வுகளைத் தடுக்க இதுபோன்றதொரு சட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்நாட்டு அமைச்சர் முகமது செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

ஸ்பைவேர் மென்பொருளைத் தடுக்க சில யோசனைகள்

இணையதள உலகில் ஸ்பைவேர் என்று அழைக்கப்படும் கேடு விளைவிக்கும் மென்பொருள்கள் பலரை அடிக்கடி பிரச்சனைக்குள்ளாக்குவது பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அதாவது உங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை நீங்கள் அறியாமலேயே அடுத்தவருக்கு அனுப்பும் தீங்கான மென்பொருள்தான் ஸ்பைவேர் என்று அழைக்கப்படுகிறது.
ஆம். கணினி முன் அமரும் நாம் தீய நோக்கம் கொண்ட சிலரால் கண்காணிக்கப்படுகிறோம். உங்கள் கணினி இந்த மென்பொருளால் பாதிக்கப்பட்டால், உங்கள் பெயர், கடவுச் சொல், வங்கிக் கணக்கு விபரம், கடன் அட்டை விபரம் ஆகியவை களவு போகும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் உங்கள் சொந்த தகவல்களை வைத்துக் கொண்டு மறைமுக வேலைகளில் யார் வேண்டுமானாலும் ஈடுபட முடியும் என்பதே உண்மை.
இந்த ஸ்பைவேர்களை நீக்குவது கடினம். தன்னைத்தானே ஒரு கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளும் இந்த மென்பொருட்களை கண்டறிவதும் கடினம். இந்த ஸ்பைவேர்களை அகற்ற இதோ சில யோசனைகள்:
பாப்-அப் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்: இணையதளத்திற்கு செல்லும்போது உண்டாகும் பாப்-அப்-களை ஒரு போதும் கிளிக் செய்ய வேண்டாம். அதேபோல் ஆமாம் அல்லது இல்லை என்ற பட்டன்களை ஒரு போதும் கிளிக் செய்யாதீர்கள். பாப்-அப் தடுப்பான் வசதியை பயன்படுத்தவும்.
எதை டவுன்லோடு செய்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை: இலவச மென்பொருள்களை டவுன்லோடு செய்தால் அதில் ஸ்பைவேர் இருக்கலாம் எச்சரிக்கை. இதில் ஸ்பைவேர் இருக்காது என்று ஒரு போதும் நினைத்து விட வேன்டாம். இசை மற்றும் சினிமா கோப்புகளை ஃபைல் ஷேரிங் நிரல்களிலிருந்து டவுன்லோடு செய்யும்போது ஸ்பைவேர் உங்கள் கணினிகளில் இன்ஸ்டால் ஆகும் அபாயம் உள்ளது.
ஸ்பேம் மெயில்களுக்கு பதில் அளிக்காதீர்கள்: ஒரு சில மின்னஞ்சல்கள் ஸ்பைவேரை அழிக்கும் மென்பொருள் என்று அறிவிப்புடன் உங்களுக்கு வரும். இவை மோசடியான மின்னஞ்சல்களாக இருக்க வாய்ப்புண்டு. இதனை திறந்தாலே போதும் ஸ்பைவேர் உங்கள் கணினிகளில் வந்து உட்கார்ந்து விடும்.
விண்டோஸ் சாஃப்ட்வேர்களை அவ்வப்போது மேம்படுத்தவும்: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அப்டேட் பாதுகாப்பு குறித்த விவரங்களை அளிக்கிறது. அதன்படி உங்கள் கணினிகளை மேம்படுத்தி வந்தால் ஸ்பைவேர் ஆபத்திலிருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம்.
ஃபயர்வால் இன்ஸ்டால் செய்க: உங்களுக்கு தெரியாமல் உங்கள் கணினிகளில் நுழையும் மென்பொருட்களை ஃப்யர்வால் கண்டுபிடிக்கும். இது உங்கள் தரவுகள் அனைத்தையும் கண்காணிக்கும். விண்டோஸ் எக்ஸ்.பி. உள்ளுக்குள்ளேயே ஃபயர்வால் வசதியுடன் உள்ளது. அதனை இயக்கிவிட வேண்டியதுதான் உங்கள் வேலை.
ஸ்பைவேர் அகற்றும் கருவிகளை பயன்படுத்தவும்: ஸ்பைவேர் தடுப்பு புரோகிராம்கள் கணினியில் நுழையும் ஸ்பைவேர்களை அகற்றுவதில் சிறந்தது. இதில் இலவசமாக நிறைய கிடைக்கிறது என்றாலும், இலவச மென்பொருள்களே இன்னொரு ஸ்பைவேராக இருக்க வாய்ப்புண்டு. அதாவது நன்கு பரிசோதனை செய்யப்பட்ட, அங்கீகாரம் பெற்ற ஸ்பைவேர் அகற்றும் கருவியை பயன்படுத்துவதே சிறந்தது.
கண்காணிப்பிலிருந்து தப்பித்து, பாதுகாப்புடன் கணினியில் சொந்த வேலைகளில் ஈடுபட இந்த துறையை சார்ந்த நிபுணர்களிடமும் கலந்தாலோசிக்கலாம்.

லேப்டாப் விற்பனையால் யு.பி.எஸ் சந்தை சரிவு

லேப்டாப் எனப்படும் மடிக் கணினிகளை தற்போது தனி நபர்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதால், மின்தடை தொந்தரவுகளை எதிர்கொள்ளும் யு.பி.எஸ்-களின் விற்பனை சரிந்து வருவதாக தகவல் தொழில் நுட்ப ஹார்டுவேர் உயர் மட்ட அமைப்பான மெய்ட் தெரிவித்துள்ளது.
அதாவது குறைந்த உபயோக யு.பி.எஸ்-களின் விற்பனைச் சந்தை கடந்த அரையாண்டில் 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாகவும், இதில் குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தும் கணினிகளுக்கான யுபிஎஸ், 69 சதவீத சந்தையைக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எஞ்சிய 31 சதவீதம் மட்டுமே வர்த்தக நிறுவனங்களுக்கான சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மடிக் கணினிகளின் விற்பனை பெருகி வருவதால், வீட்டு உபயோக மற்றும் சிறு பயன்பாட்டு கணினிகளுக்கான யு.பி.எஸ் விற்பனை 42 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த அரையாண்டில் கணினி விற்பனையைப் பொருத்தவரை 3 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. ஆனால் இதற்கு தக்கவாறான யு.பி.எஸ் விற்பனை நடைபெறவில்லை என்று இந்த துறையைச் சேர்ந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதே காலக் கட்டத்தில் மடிக் கணினிகளின் விற்பனை மொத்த கணினி விற்பனைச் சந்தையில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு மடிக் கணினிகள் இந்த சந்தையில் வெறும் 3 சதவீத விற்பனையை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மடிக் கணினிகளில் திடீர் மின் தடை போன்றவற்றால் வேலை பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் இது ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியால் இயங்குகிறது.
ஆனால் மிகப்பெரிய நிறுவனங்கள் தரவுகளை பாதுகாக்க பயன்படுத்தும் கணினிகளுக்கான யு.பி.எஸ் விற்பனை சுமார் 30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது 20 கே.வி.ஏ மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட யு.பி.எஸ் சந்தை வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஏன் பெரிய நிறுவனங்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தலாமே என்று நினைக்கலாம். ஆனால் நீண்ட நேரம் ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாது, மேலும் அது காற்றில் மாசையும், அதிகமான சப்தங்களையும் எழுப்பக்கூடியது. ஆனால் செலவு குறைவுதான்.
ஆனால் யு.பி.எஸ் தயாரிப்பு நிறுவனங்கள் கவலை அடையவேண்டியதில்லை பெரு நகரங்களில் குறைந்த பயன்பாட்டு யு.பி.எஸ்களின் விற்பனை குறைந்தாலும், மற்ற சிறு நகரங்களில் இதன் விற்பனை கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் சிறிய பயன்பாட்டிற்கான யு.பி.எஸ்கள் விற்பனையை விட அதிகபட்ச உபயோக கணினிகளுக்கான யு.பி.எஸ்களின் விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் என்று யு.பி.எஸ். தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் பெருகும் உள்கட்டமைப்பு திட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சில்லரை விற்பனை நிலையங்களின் பெருக்கம், வங்கித் துறையின் வளர்ச்சி மற்றும் மின் நிர்வாக திட்டங்கள் ஆகியவற்றால் யு.பி.எஸ்-களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாக இந்த துறையை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.