கோவையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ்காரத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 29ம் தேதி முதல் கோவையில் நடந்து வரும் மா.கம்யூ. கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் அக்கட்சியின் பொலீட்பீரோ மாற்றி அமைக்கப்பட்டது.
அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகியோர் முதுமை காரணமாக பொலிட்பீரோ உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இந்நிலையில் இன்றைய இறுதிநாள் கூட்டத்தில் ஜோதிபாசுவுக்கு பொலிட்பீரோவுக்கு சிறப்பு அழைப்பாளராகவும், சுர்ஜித் மத்திய குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1964௦ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சி உருவானது முதல் கடந்த 44 ஆண்டுகளாக ஜோதிபாசுவும், சுர்ஜித்தும் பொலிட்பீரோ உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொலிட்பீரோவில், அக்கட்சியின் ஆர்.உமாநாத் இடம் பெறவில்லை. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய குழு உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 உறுப்பினர்கள் கொண்ட பொலீட்பீரோவில் கேரள உள்துறை அமைச்சர் கொடிவேரி பாலகிருஷ்ணன், சிஐடியு பொதுச்செயலாளர் முகமது அமின், மேற்குவங்க அமைச்சர் நிரூபம் சென் ஆகியோர் புதிதாக தேர்வாகியுள்ளனர்.
பிரகாஷ் காரத், கேரள முதல்வர் அச்சுதானந்தன், மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுரா முதல்வர் மானிக் சர்க்கார், சீத்தாராம் யெச்சூரி, சிஐடியு தலைவர் எம்.கே.பாண்டே, பினராய் விஜயன், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பீமன் போஸ், கே.வரதராஜன், பி.வி.ராகவுலு மற்றும் பிருந்தாகாரத் ஆகியோரும் அக்கட்சி பொலிட்பீரோ உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
மேலும், கேரள நிதியமைச்சர் தோமஸ் ஐசக், மேற்குவங்க அமைச்சர் கவுதம் தேவ் உட்பட 17 புதிய உறுப்பினர்களுடன், 87 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியில், அக்கட்சியின் செஞ்சட்டை தொண்டரணி சார்பில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.