![]() |
கர்நாடகாவில் தனக்கு எதிராக சிலர் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஒகேனக்கல் விவகாரம் தொடர்பான பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து கன்னட தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'உதைக்க வேண்டும்' என்று தான் கூறியது தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இரு மாநில மக்களையும் அமைதியாக வாழவிடாமல் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்ரு தான் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்.
எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் தான் பேசவில்லை என்றும், ஒட்டு மொத்த கன்னடர்களையும் இழிவாகப் பேசுவதற்கு தான் ஒன்றும் முட்டாள் அல்ல என்றும் ரஜினி தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்காவிட்டால் தனது படம் கர்நாடகாவில் திரையிடமுடியாது என்று கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதனால் தனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கன்னட ரசிகர்கள் தான் வேதனை அடைவார்கள் என்றார்.
மன்னிப்பு கேட்கவேண்டிய அளவுக்கு தான் எந்த தவற்றையும் புரியவில்லை. எனவே மன்னிப்பு கோரப்போவதில்லை என்றார் ரஜினி.
எனினும் நடிகர்கள் அம்பரீஷ், விஷ்ணு வர்த்தன், அஸ்வத், பர்வதம்மா ராஜ்குமார் ஆகியோர், தான் தவறு இழைத்து விட்டதாகக் மன சாட்சியை தொட்டு கூறினால், மன்னிப்பு கேட்கவும் தயங்கப் போவதில்லை என்றார் அவர்.
தனக்கு எதிராக சிலர் கர்நாடகாவில் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது தன் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது என்றார்.


