Search

Custom Search

Monday, June 2, 2008

சிறார்களைக் குஷிப்படுத்தும் `நார்னியா ரிட்டன்ஸ்'

'நார்நியா ரிட்டன்ஸ்'
அமெரிக்காவில் குழந்தைகளுக்காக வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட எஸ்.சி.லுயிஸ் எழுதிய தி குரோனிக்கல்ஸ் ஆப் நார்நியா நாவலின் 2ம் பாகம், `நார்நியா ரிட்டன்ஸ்' என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது.
நார்நியா நாட்டின் ராஜாவைக் கொலைசெய்து விட்டு ஆட்சியைப் பிடிக்கிறார் அவரது தம்பி மிராஸ். அவருக்கு டெர்மைன் வீரர்கள் உதவுகின்றனர்.
அவரை எதிர்த்து இளவரசர் காஸ்பியன் போராடுவதே கதை. பீட்டர் தலைமையில் இங்கிலாந்தில் இருந்து வரும் எட்மண்ட், சூசன், லுசி ஆகியோர் இளவரசருக்கு உதவுகின்றனர்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மிராஸின் கோட்டைக்குள் நார்நியர்கள் நுழைந்து தாக்குகின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் டெர்மைன்களின் கை ஓங்குகிறது. அங்கிருந்து பாதி நார்நியர்களே தப்ப முடிகிறது. மற்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இதையடுத்து நார்நியர்களின் கோட்டையை மிராஸ் படைகள் தாக்க வருகின்றன.
சண்டையில் அப்பாவி மக்கள் மடிவதற்குப் பதில் நாம் இருவரும் மோதுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அந்த படைகள் வெற்றி பெற்றதாக அறிவிப்போம் என்று மிராஸிடம் கூறுகிறார் பீட்டர். இந்த சவாலை மிராஸ் ஏற்க, இருவருக்கும் கடும் வாள் சண்டை நடக்கிறது.
முடிவில் மிராஸை பீட்டர் வீழ்த்துகிறான். மிராஸை கொல்லும் வேலையை இளவரசன் காஸ்பியனிடம் பீட்டர் கொடுக்கிறான். மிராஸிற்கு காஸ்பியன் உயிர் பிச்சை அளிக்கிறான். ஆனால் மிராஸின் தளபதியே மிராஸை கொலை செய்துவிட்டு, நார்நியர்களை தாக்குமாறு டெர்மைன்களுக்கு உத்தரவிடுகிறான். இரு தரப்பிற்கும் கடும் சண்டை நடக்கிறது.
இடைப்பட்ட நேரத்தில் காட்டுக்குள் செல்லும் லுசி, "அஸ்லான்' என்ற சக்திவாய்ந்த சிங்கத்தை அழைத்து வருகிறாள். சிங்கம் ஆணையிட்டதும் காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் உயிர் பெற்று வந்து, டெர்மைன்களை துவம்சம் செய்கின்றன.
அங்கிருந்து டெர்மைன்கள் தப்பித்து, அருகில் உள்ள ஆற்றுக்கு செல்கின்றனர். அங்கு வரும் அஸ்லான், ஆறுகளுக்கான கடவுளை அழைத்து, பிரளயத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான டெர்மைன்களை அழிக்கிறது. முடிவில் காஸ்பியனிடம் நார்நியாவை ஒப்படைத்து விட்டு, 4 இளைஞர்களும் ஊர் திரும்புகின்றனர்.

கொஞ்சம் கதையை சுருக்கியிருந்தால் இன்னமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
படத்தில் வரும் குதிரை மனிதர்கள், பேசும் சிங்கம் போன்றவை குழந்தைகளை குஷிப்படுத்தக் கூடியவை. படத்தில் காமெடியனே ஒரு பேசும் சுண்டெலி தான். நடக்கும் மரங்கள், கொந்தளிக்கும் ஆறு, மலை உச்சியில் இருக்கும் கோட்டை போன்றவை கிராபிக்சின் கைவண்ணங்கள்.
ஆண்ட்ரூ இயக்கி உள்ள படத்தில், பீட்டராக வில்லியம் மூஸ்லே, சூசனாக அன்னா பாப்பிள்வெல், எட்மண்டாக ஸ்காண்டர் கெய்ன்ஸ், லுசியாக ஜார்ஜி ஹென்லே, காஸ்பியனாக பென் பார்ன்ஸ், அரசர் மிராஸாக செர்ஜியோ ஆகியோர் நடித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடியும் தருவாயில், நார்னியா ரிட்டர்ன்ஸ் படம், சிறுவர் - சிறுமிகளை குஷிப்படுத்துவதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ரூபாய் வீழ்ச்சியால் உயரும் கணினி விலைகள்

எடை குறைவான மடிக்கணினியை நீங்கள் வாங்க நினைத்திருக்கலாம். ஆனால் பல காரணங்களினால் நீங்கள் வாங்குவதை ஒத்திபோட்டிருக்கலாம். ஆனால் ஒத்தி போட்டதற்காக நீங்கள் வருந்த நேரிடலாம். டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையத் துவங்கியிருப்பதால் லேப்-டாப் உள்ளிட்ட கணினிகளின் விலை உயர்ந்து வருகின்றன.
கணினி விற்பனையாளர்கள் விலைகளை ஏற்கனவே கடந்த வாரத்தில் 7 முதல் 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். லேப்டாப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹெச்.பி., ஹெச்.சி.எல்., ஸெனித் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தி விட்டன. இதனைத் தொடர்ந்து லெனோவோ, டெல் ஆகிய நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் ரூபாய் மதிப்பு சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளது. டாலர் ஒன்றிற்கு ரூ. 40 ஆக இருந்தது, தற்போது 42.80 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஹெச்.பி. நிறுவனம் சுமார் 13 சதவீதம் வரை விலை அதிகரிப்பு செய்துள்ளது.
டாலர் மதிப்பு உயர்வு மற்றும் சில உதிரி பாகங்களின் விலை உயர்வும் கணினி விலை உயர்விற்கு காரணம் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
தற்போது அதி பயன்பாட்டுக் கணினிகளுக்கு மட்டும் உயர்ந்த விலைகள் இன்னும் சில நாட்களில் லேப்டாப்களுக்கும் தொற்றும் என்று தெரிகிறது.
ஹெச்.சி.எல். நிறுவனம் தங்களது அனைத்து தயாரிப்பிற்கும் 5 முதல் 7 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் உதிரிபாகங்கள் விலை உயருகிறது. இதனால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அசெம்ப்ளிங் யூனிட் வைத்துள்ளன. ஏனெனில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வது மலிவாகும்.
ஸெனித் நிறுவனமும் கணினிகள் விலையை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.
ஆனால் இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும், விரைவில் விலைகள் இறங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ரூபாய் மதிப்பு உயரும்போது விலைகள் குறையும் என்று தெரிகிறது.

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.
அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.
அதாவது வாடிக்கையாளர்கள் பேக்-அப் தேவையான தரவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுபிறகு ஜிபிஆர்எஸ் வழி சர்வரை அடையும் அதன் பிறகு ஒரு டிஜிட்டல் அறையில் சேமிக்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும்.
இது பாதுகாபானதே. ஏனெனில் பயனர் அடையாளம் மற்றும் பாஸ்வேர்டு இருந்தால் மட்டுமே இந்த தகவலை அணுக முடியும். ஒவ்வொருவரும் இந்த சேவையை தங்கள் செல்பேசியிலேயே ஏற்படுத்தி கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அல்லது செல்பேசி இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் மூல்மாகவோ கோரிக்கை அனுப்பி இந்த சேவையை செல்பேசியில் உருவாக்கிக் கொள்ளலாம்.
சிம் கார்டிலிருந்து தரவுகளைப் பெறும் மென்பொருளைக் காட்டிலும் இந்த மென்பொருள் அதிக பயனுள்ளது. அதாவது இதில் அழிக்கப்பட்ட தரவுகளை கூட வாடிக்கையாளர்கள் செல்பேசி தொலையும் பட்சத்தில் திரும்பப் பெறலாம். தங்கள் தொலைந்த செல்பேசியில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்கள், அழித்த தகவல்கள் என்று அனைத்தையும் செல்பேசி தொலைந்தாலும் ஒரு நெட்வொர்க் வசதி மூலம் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் ஒரு செல்பேசி சாதனத்திலிருந்து வேறு செல்பேசி சாதனத்திற்கு மாறினால் கூட தகவல்களை எந்தவித சிரமமும், தடையும் இன்றி புதிய செல்பேசிகளில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த தரவு மீட்பு பயன்பாட்டுச் சேவையை பயன்படுத்தும் 3வது நிறுவனம் பார்தி ஏர்டெல் ஆகும். மலேசியாவின் மேக்சிஸ், இந்தோனேஷியாவின் இந்தோஸாட் ஆகிய 2 நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

'டாடா ஸ்கை' மாத வாடகை குறைப்பு

'டிடிஎச்' எனப்படும் வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனமான டாடா ஸ்கை தனது மாத கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் 3 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய போது டாடா ஸ்கை நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் விக்ரம் மெஹ்ரா இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, இதுவரை ஃபேமிலி பேக் (Family Pack) பிரிவுக்கு வசூலிக்கப்பட்ட ரூ.250 கட்டணம் தற்போது ரூ.200 ஆகவும், சூப்பர் சேவர் பேக் (Super Saver pack) பிரிவுக்கான கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.260 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஃபேமிலி பேக் பிரிவில் ஹிந்தி, பிராந்திய மொழி, கார்டூன் மற்றும் செய்தி என மொத்தம் 90 சேனல்கள் இடம்பெற்றுள்ளது. இதேபோல் சூப்பர் சேவர் பேக் பிரிவில் ஆங்கில மொழி திரைப்பட சேனல்கள் உட்பட 110 சேனல்களுக்கான தொலைக்காட்சி சேவை வழங்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள மெஹ்ரா, விரைவில் 3 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை டாடா ஸ்கை எட்டும் எனக் கூறியுள்ளார்.