
தற்போது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்லூரிகளில் புதுமுக ஊழியர்களை அல்லது ட்ரெய்னீக்களை (Freshers and Trainees) தேர்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது.
இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஏகப்பட்ட தொகையை முதலீடு செய்வதாகக் கூறும் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவர்களை நிறுவனத்தில் தக்கவைக்க ஒப்பந்த பாண்டுகளில் கையெழுத்திட வைக்கின்றன.
முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் புதிய மென்பொருள் பொறியாளர்களின் பயிற்சிக்காக சுமார் 150 மில்லியன் டாலர் தொகையை செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் பயிற்சி முடிந்து வேலையை விட்டுச் செல்லாமல் இருக்க இந்த பிணையம் அவசியம் என்று கூறி வருகின்றன.
தனது கனவு வேலையான மென்பொருள் துறையில் அடியெடுத்து வைக்கும் இளம் மாணவர்கள், பல நேரங்களில் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதற்கு கடுமையான பிணைத் தொகையை கட்டிவிட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. இதனால் பலர் பெரிய அளவில் கடன் வாங்கவும் நேரிடுகிறது.
பிணைத்தொகை ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை கேட்கப்படுகிறது. இந்த தொகையை கொடுக்க முடியவில்லை எனில் வங்கியில் கடன் வாங்கி செலுத்துமாறு கோரப்படுகின்றனர். இது மேலும் செலவுகளை அதிகரிக்கும் விஷயமாகும். ஏனெனில் கடனுக்கு வட்டி கட்டவேண்டும். எனவே ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து முதல் சம்பள காசோலையை வாங்கும் முன்பே ஒரு மாணவ ஊழியர் கடனாளியாகி விடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
ஒரு சிலர் பாண்ட் தொகைக்காக ரூ. 2 லட்சம் வரையில் வங்கிக் கடன் பெறுகின்றனர். இதனால் 2 ஆண்டு கால கடனுக்கு குறைந்தது ரூ.2500 வட்டி செலுத்த நேரிடுகிறது.
அதாவது 2 ஆண்டுகள் பிணை முடிந்தவுடன் வங்கி வட்டித் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாளிக்கு திரும்ப செலுத்தி விடுகிறது. ஆனால் மீதித் தொகை வங்கிகளிடமே உள்ளது. பிணைக்காலத்தில் வேலையை விட்டுச்சென்றால் பிணைத்தொகை திரும்பத் தரப்படமாட்டாது. ஆனால் திறமை குறைவு காரணமாக நிறுவனமே வேலையை விட்டு அனுப்பி விட்டால் பிணைத் தொகை திரும்பக் கிடைக்கும்.
ஆனால் இதுபோன்ற தருணங்களில் வட்டித் தொகையை வங்கிகள் திரும்பத் தராது. ஆனால் ஒப்பந்த காலத்தை வெற்றிகரமாக கழித்து விட்டு நிறுவனத்தில் நீடித்தால் பிணைத் தொகை திரும்ப கொடுக்கப்பட்டு விடுகிறது.
சில நிறுவனங்கள் இவ்வளவு காலத்திற்கு பணியில் இருப்பேன் என்பதற்கு உத்தரவாதமாக ஒப்பந்தம் இடுகிறது. அந்த காலம் முடிவதற்குள் ஒருவர் வேலையைத் துறந்தால், அவர் கண்னி முன் அமர்ந்து பணியாற்றிய நேர அடிப்படையில் ஒரு தொகையை கணக்கிட்டு அவரை கட்டிவிட்டு வேலையை துறங்கள் என்கிறது.
இது அனைத்து முன்னணி நிறுவனங்களும் கடைபிடிக்கும் நடைமுறைதான் என்றாலும், அந்த காலக்கட்டத்தில் குறைந்த வருவாய், குறைந்த ஊதிய உயர்வு ஆகியவற்றை ஒருவர் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நிறுவனங்கள் பிணைத் தொகையுடன் அசல் கல்லூரி சான்றிதழ்களையும் தங்களிடம் வைத்துக் கொள்கிறது. இதனால் ஒருவர் வேறு வேலைக்கு மனு செய்யவும் முடியாத நிலை ஏற்படுகிறது.
பிணைத் தொகையை செலுத்தாமல் வீம்புக்கு வேலையை துறந்தால் சட்ட நடவடிக்கைகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டி வரும்.
பிணை ஒப்பந்தங்கள் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளுக்கு சட்டத்தை அணுக முடியாத துர்பாக்கிய நிலையே உள்ளது.