Search

Custom Search

Friday, July 4, 2008

வீடியோ லாகின் விவரம் வெளியிட யூ-டியூப் தளத்திற்கு உத்தரவு


யூ-டியூப் என்ற வீடியோ பகிர்வு இணையதளத்தில் யார் யார், எப்போது, எந்தெந்த வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்கின்றனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம், வயாகாம் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வயாகாம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் வீடியோ பதிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் எவ்வளவு நபர்களால் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனம் அளிக்க வேண்டும் என வயாகாம் வழக்கு தொடர்ந்தது.

சுமார் ஒரு பில்லியன் டாலர் காப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் அமெரிக்க நீதிபதி லூயிஸ் எல்.ஸ்டான்டன் இந்த புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளார்.

வயாகாம் சார்பில் காப்புரிமை பாதுகாப்பு பெற்ற வீடியோக்கள், யூ-டியூப் மூலம் அதிக நபர்களால் பார்க்கப்படுவதாக வயகாம் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதற்கு யூ-டியூப் தளத்தில் யார், யார் எந்த வீடியோக்களை பார்க்கிறார்கள் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம் அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.

அதாவது, ஒவ்வொர்ரு வீடியோவும் பார்க்கப்பட்ட எண்ணிக்கை பற்றிய தரவுகளை வெளியிடவேண்டும். ஆனால் இது வீடியோ பார்த்த ஒவ்வொரு பயனாளரின் தனிப்பட்ட லாக் இன் ஐடி, ஐ.பி. முகவரி ஆகியவை தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

12 டெராபைட்கள், அதாவது 12 மில்லியன் புத்தகங்களுக்குச் சமமான தரவுகளை அளிப்பது என்பது அதிக செலவு வைக்ககூடியது என்றும், காலத்தை விழுங்கும் செயல் என்றும், பயனாளர் அந்தரங்க அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் என்றும் கூகுள் நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
மேலும் பயனாளர்களின் பயனாளரின் தனிப்பட்ட லாக் இன் ஐடி தவறுதலாக வெளிப்படுத்தப்படலாம் என கூகிள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. ஆனால் கூகிள் பயனாளரின் அடையாளம் குறித்த அச்சம் தேவையற்றது என்று தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இந்த தகவலைப் பெறுவதற்கான நியாயம் உள்ளதாக கூறினார்.

ஆனால் வழக்கு தொடர்ந்தவர்களோ இன்னும் மேலே போய் கூகுள் தனது சோர்ஸ் குறியீட்டை வெளியிட வேண்டும் என்று கோரினர். ஆனால் கூகுள் நிறுவனம் தனது புகழ் பெற்ற தேடல் எந்திர தொழில்நுட்பங்களை வீடியோ காப்புரிமை விதிகளை மீறுவதற்காக பயன்படுத்தியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வயாகாம் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

வயாகாம் வீடியோ ஷோக்களுக்கான காப்புரிமை விதிகளை மீறி அந்த வீடியோக்கள் மூலம் யூ-டியூப் ஏகப்பட்ட வருவாய் ஈட்டியுள்ளதாக வயாகாம் ஒரு பில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கேட்டுள்ளது.

இந்த வழக்குடன் பிரிட்டிஷ் கால்பந்து லீக், மற்றும் சில நிறுவனங்கள் கூகுளின் யூ -டியூப் மீது தொடுத்த வழக்குகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் யூ-டியூபை பார்க்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஐ.பி. முகவரியைக் கொண்டு தனி நபரை அடையாளம் காணமுடியாது என்றும் கூறப்படுகிறது.

கோர்ட் தீர்ப்பினால் ஏமாற்றம் அடைந்துள்ள கூகுள், தரவு விவரங்களை தரும் முன் லாக்-இன் ஐ.டி.க்களை அனாமதேயமாக்கி விட்டுத்தான் தருவோம் என்று வயாகாமிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனா வயாகாம் நிறுவனமோ, தங்களுக்குத் தேவை எவ்வளவு முறை தங்களது வீடியோ ஷோக்கள் பார்க்கப்பட்டுள்ள என்ற வரலாறுதான், இதில் பயனாளர் ஐ.டி. எங்கு வருகிறது என்று கேட்கிறது. எங்கள் வாதத்தின் படி காப்புரிமை பெற்ற வீடியோக்கள் அபரிமிதமாக பார்க்கப்பட்டுள்ளது என்பதே. அதற்கு மட்டுமே இந்த தரவுகளை பயன்படுத்தப்போகிறோம் என்று கூறுகின்றனர்.

விறுவிறுப்பான இவ்வழக்கிற்கு அளித்துள்ள முதற்கட்ட தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரலில் 'கேப்டன் டிவி': பிரேமலதா

தேமுதிக சார்பில் வரும் ஏப்ரல் மாதம் கேப்டன் டிவி துவக்கப்படும் என்று, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை திரிசூலத்தில் இன்று நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

கவர்ச்சிகரமான இலவச திட்டங்கள் மூலம் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்ற அவர், விலைவாசி உயர்வால் ஏழை- நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை விஜயகாந்த் நன்கு புரிந்து வைத்திருப்பதாகவும், மக்களின் முன்னேற்றத்திற்கான வழி அவருக்கு தெரியும் என்றும் பிரேமலதா குறிப்பிட்டார்.

தைரியம் இருந்தால் அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட வேண்டும் என்று சவால் விட்ட பிரேமலதா, தேமுதிகவிற்காக அதிகாரபூர்வ 'கேப்டன் டிவி' வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.