![]() | ||
|
இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்த ஆண்டில் ஏற்பட்ட அல்லது துவங்கியுள்ள பல பிரச்சனைகளும் நெருக்கடிகளும்தான் அடுத்த இரண்டு ஆண்டுகளை ஆளப்போகின்றன என்று பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது அமெரிக்காவில் ஏற்பட்டு, பின் உலகத்தையே தழுவிக் கொண்ட பொருளாதாரப் பின்னடைவே.
உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு!
சப் பிரைம் கிரைசிஸ் என்றழைக்கப்பட்ட அதிக வட்டி விகிதத்திற்கு அளிக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் - கடனைத் திருப்பிக் கட்டும் தகுதி குறைவாக உள்ளவர்களுக்கு அளித்ததால் - தவணைகள் கட்டப்படாமல், அதன் காரணமாக அமெரிக்காவில் வீடு-மனைத் தொழிலில் சரிவு ஏற்பட, அந்தச் சரிவு பெரும் வங்கிகளையும், அந்த வங்கிகள் கடன்களாக அளித்த அடமானப் பத்திரங்களை வாங்கிய முதலீட்டு வங்கிகளைப் பாதிக்க, அந்த
![]() | ||
|
அமெரிக்காவின் முதலீட்டுச் சந்தை அதள பாதாளத்தில் வீழ்ந்தது. அவைகளை மீட்க அமெரிக்க மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு 700 பில்லியனை ஒதுக்கியது.
ஆயினும், விழுந்த நிதிச் சந்தை எழுந்திருக்கவில்லை. படுத்த படுக்கையான அமெரிக்க பங்குச் சந்தை எழுந்து நிற்கத் திணறியது. அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். சப் பிரைம் கிரைசிஸ் ஏற்படுத்திய நிதி நெருக்கடி, அமெரிக்க பொருளாதார பின்னடைவிற்கு வித்திட்டது.
அமெரிக்கத் தொழில்துறை திணறலுக்கு உள்ளானது. அமெரிக்காவின் அடையாளமாகக் கருதப்பட்ட பல பெரும் நிறுவனங்கள் திவாலானாதால், வேலை இழப்பு அதிகரித்தது. இதுவரை 22 இலட்சம் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர்.
1929ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை விட பன்மடங்கு பெரிய பின்னடைவு இது என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
![]() | ||
|
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் வணிக உறவுகளைக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயின. ஜப்பான் பெரும் பாதிப்பிற்கு ஆளானது. அந்நாட்டின் பல நிதி நிறுவனங்கள் திவாலாயின. பெரும் நிறுவனங்களான சோனியில் இருந்து டொயோட்டா கார் நிறுவனம் வரை ஆட்குறைப்பில் இறங்கிவிட்டன.
இங்கிலாந்தில் பணியாற்றிவரும் 15 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்று இந்திய சங்கம் கூறியுள்ளது. இந்தியாவிலும் பணி வாய்ப்புகள் குறையத் தொடங்கியுள்ளது மட்டமின்றி, ஒப்பந்தப் பணியில் சோர்ந்தோர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
![]() | ||
|
கச்சா எண்ணெய் ஏற்றமும் சரிவும்!
பொருளாதார பின்னடைவிற்கு முன்னர், உலகை மிகப் பெரிய அளவிற்கு மிரட்டியது கச்சா விலை ஏற்றமே.
ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக கச்சா விலை ஏறியது. ஒவ்வொரு நாளும் விலையேற்றம். 2007 ஆகஸ்டில் 67 டாலராக இருந்த பிரெண்ட கச்சா, இந்த ஆண்டு ஆகஸ்டில் 135 டாலர்களை எட்டியது. அதற்குப் பிறகும் ஏறுமுகமாக இருந்து 146 டாலர்களுக்குச் சென்றது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும், கச்சா உற்பத்தி செய்யும் ஓபெக் உள்ளிட்ட நாடுகளும் பிரமாதமாகக் கொள்ளையடித்தன. சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே போவதால் விலை ஏறுகிறது என்று கதை விட்டனர். உற்பத்தியை அதிகரித்தாலும் விலை குறையாது என்று கூட மிரட்டினர்.
ஆனால், தேவை அதிகரிப்பு இல்லை, முன்பேரச் சந்தையில் ஊக வணிகர்கள் செயற்கையாக விலைகளை ஏற்றுகின்றனர் என்று பல்வேறு ஆதாரங்களுடன் செய்திகள் வரத் தொடங்கின. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையத் தொடங்கியது. மாற்று எரிபொருள் தேடலில் உலக நாடுகள் கவனம் செலுத்தத் தொடங்கின. அமெரிக்காவில் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து பயன்படுத்தத் தொடங்கியதன் காரணமாக நாளுக்கு 2 இலட்சம் பீப்பாய் எண்ணெய் தேவை குறைக்கப்பட்டது.
![]() | ||
|
தற்பொழுது கடந்த 4 ஆண்டுகளில் காணாத அளவிற்கு பீப்பாய் கச்சாவின் விலை 34 டாலர்களுக்கு குறைந்துள்ளது. விலைச் சரிவை தடுத்து நிறுத்த உற்பத்தியைக் குறைப்போம் என்று ஓபெக் நாடுகள் சூளுரைத்தும் விலை ஏறவில்லை.
பயங்கரவாதம்
பயங்கரவாதம் உலகின் வேறு எந்தக் கண்டத்தையும் விட ஆசியாவை அதிகம் பாதித்தது இந்த ஆண்டில்தான். பாகிஸ்தானின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதுடன் முடிந்த கடந்த ஆண்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நடத்தப்பட்டது.
![]() | ||
|
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் தாலிபான், அல் கய்டா பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகள் நடத்திவந்த பயங்கரவாத ஒழிப்புப் போரில் ஒரு பெரும் திருப்பமாக, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ஆஃப்கான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வசிரிஸ்தான் மலைப் பகுதியில் பதுங்கியுள்ளனர் என்று கூறி அமெரிக்க - நேச நாட்டு படைகள் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின. அது பாகிஸ்தானிற்குள் பிரச்சனையாக, தனது படைகளை எல்லைப்பகுதிக்கு அனுப்பி பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இதில் பயங்கரவாதிகளின் பல தாக்குதல்களில் ஏராளமான பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் மீது தாக்குதல்!
![]() | ||
|
பயங்கரவாத தாக்குதல்களை முன்னறிந்து தடுக்கும் ஆற்றல் நமது உளவுப் பிரிவுகளுக்கு இல்லை என்று பலத்த குற்றச்சாற்று எழுந்த நிலையில், இந்தியாவின் நிதித் தலைநகராக கருதப்படும் மும்பையின் மீது நவம்பர் 26ஆம் தேதி மிகப்பெரிய தாக்குதல் நடந்தது.
மும்பைக்குள் ஊடுறுவிய பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் சத்திரபதி சிவாஜி இரயில் நிலையத்திலிருந்து, தாஜ் கோரமண்டல், டிரைடண்ட் நட்சத்திர விடுதிகளில் புகுந்து தாக்குதல் நடத்தி பலரைக் கொன்று குவித்தது மட்டுமின்றி, அயல் நாட்டவர் பலரை சிறைபிடித்தனர்.
![]() | ||
|
இந்தியா கோபமுற்றது. தங்கள் நாட்டவர்களும் கொல்லப்பட்டதில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவிற்கு ஒத்துழைக்க முன்வந்தன. ஆனால், முதலில் ஒத்துழைப்போம் என்று பேசிய பாகிஸ்தான், பிறகு முரண்பட்டு பேச ஆரம்பித்தது. அந்த நிலையே இன்றுவரை தொடர, இந்தியா கடுமையான குரலில் பேசி வருவதால், பாகிஸ்தான் மீது - அங்குள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
லஸ்கர் ஈ தயீபாவும் அதன் முன்னனி அமைப்பான ஜமாத் உத் தாவா ஆகியனதான் மும்பை தாக்குதலின் பின்னணியில் இருந்தன என்பதையும், அதற்கு முழு அளவிற்கு உதவியுள்ளது நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் தான் என்பதை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கூறிவிட்டன. ஆனால் மேம்போக்கான நடவடிக்கைகளுடன் பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ் ஈ மொஹம்மது அமைப்பின் தலைவர் மெளலானா மசூத் அசாரை வீட்டுச் சிறையில் வைத்த பாகிஸ்தான் அரசு, சில நாட்களிலேயே “அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாது” என்று கூறிவிட்டது.
இப்படிப்பட்ட பதில்கள் வரத் துவங்கிய பின்னரே கடுமையான குரலில் இந்தியா பேச ஆரம்பித்தது.
![]() | ||
|
இரு நாடுகளுக்கிடையே பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு முடிகிறது. இதன் தொடர்ச்சியாக நடைபெறப்போகும் நிகழ்வுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.









